மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அஜ்மல் கஸாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கஸாப்புக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகின்றது.
166 பேர்களை பலிவாங்கிய மும்பை தாக்குதல் வழக்கில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கஸாப்பை குற்றவாளி என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 4 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
நாட்டின் மீது போர் தொடுத்தது உள்ளிட்ட 86 வழக்குகளில் கஸாப் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.
72 பேரை கொடூரமாக கொன்ற கஸாப்பிற்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிக்காமும், பலியானவர்களின் உறவினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கஸாப் மீதான தண்டனை விவரம் மே 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எல். தஹலியானி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.எல். தஹலியானி, குற்றவாளி கஸாப்புக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.கஸாப்பை சாகும் வரை தூக்கிலிடுமாறு அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
கஸாப் மீதான 86 குற்றச்சாற்றுக்களும் நிரூபணமாகி உள்ளதாக தனது தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி, 4 குற்றச்சாற்றுக்களின் அடிப்படையில் மரணத்தண்டனை விதிப்பதாகவும், 5 குற்றசாற்றுக்களின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதிப்பதாகவும் கூறினார்.
"கஸாப் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.இதுபோன்ற ஒரு தீவிரவாதியை உயிருடன் விட்டு வைத்திருப்பது சமூகத்திற்கும், இந்திய அரசுக்கும் ஆபத்தாக அமைந்துவிடும்" என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
கந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தை நினைவு கூர்ந்த நீதிபதி, கஸாப் உயிருடன் இருந்தால் அதுபோன்றதொரு சூழ்நிலை மீண்டும் ஏற்படும் என்றார்.
கஸாப் தாமாகவே முன்வந்து லஷ்கர் இயக்கத்தில் சேர்ந்து தன்னை முஜாகிதீனாக (புனித போராளியாக) அறிவித்துக் கொண்டவன்" என்றும் கூறிய நீதிபதி தஹலியானி, கஸாப் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக மூளை சலவை செய்யப்பட்டவன் என்று அவனது சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கே.பி. பவாரின் வாதத்தை நிராகரித்ததோடு, லஷ்கர் இயக்கத்தை தோற்றுவித்த ஹஃபிஷ் சயீத்தின் உத்தரவின் பேரிலேயே கஸாப் செயல்பட்டதாக கூறினார்.
நீதிபதி தஹலியானி தீர்ப்பை படித்துக் கொண்டிருந்தபோது, கஸாப் விசும்பி அழுதான்.ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறும் அவன் கேட்டான்.
தீர்ப்பை படித்து முடித்ததும்,அதனை இந்தியில் கஸாப்பிடம் விளக்கிய நீதிபதி தஹலியானி, அவன் ஏதாவது சொல்ல விரும்புகின்றானா எனக் கேட்டார். ஆனால் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்பதுபோல் தலையை அசைத்து கஸாப் மறுத்தான்.
இதனையடுத்து கஸாப்,பலத்த பாதுகாப்புடன் ஆர்தர் ரோடு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டான.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக